Saturday, March 17, 2018

இன்று என்னிடம் ஒருவர் கேட்டார், “கௌசல்யா மறுமணம் செய்துக்கொண்டால் அது சரியா தவறா?”
எந்த கௌசல்யா?
உடுமலை சங்கரின் மனைவி புரட்சிபெண் கௌசல்யா.....
அது கௌசல்யாவின் விருப்பம்.
என்னை கேட்டால்: கணவனின் பெயரை தன் பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்வது, அவன் நினைவாகவே வாழ்ந்து இல்லறம் துறப்பது என்பதெல்லாம் கண்ணகி பிராண்ட் பிற்போக்குத்தனம்.
உண்மையில் கண்ணகி என் மகளாக இருந்திருந்தால், “கோவலன் கிடக்குறான்- அவனுக்காக என் மகளோட வாழ்க்கை வீணாகனுமா! நோ வே”, என்று நிச்சயம் அவளை மீட்டு, மன ஆறுதல் செய்து, அவள் விரும்பினால் மறுமணம் செய்வித்திருப்பேன்.....
அப்படியானால் கௌசி?
சின்ன பெண், இப்போது தான் வாழ்வை அதன் எல்லா கோணங்களிலும் பார்க்கிறாள், தன் ஆற்றல்களை புரிந்துக்கொள்கிறாள். காலம் இன்னொரு காதலை நிச்சயம் கொண்டு வரும், அப்போது “ஏககணவன் செண்டிமெண்ட்” பேசிக்கொண்டு பிற்போக்காய் தேங்கி இல்லாமல், துணிந்து மறுமணம் செய்து, இல்லறத்தில் தழைத்து அடுத்த தலைமுறை புரட்சி குட்டிகளை பல்கி பெறுக செய்ய வேண்டும்.....
ஆனால் சமுதாயம் சும்மா இருக்குமா? அப்போது சங்கர் மீது இருந்த காதல் பொய்யா? நீ நல்லவளா என்று கேட்குமே?
இந்த “நல்லவனு நிருபவித்து காட்டு” நாடகத்தை எல்லாம் நம்பி தீ குளித்துக்காட்ட அவள் என்ன சீதையா? அவள் கௌசல்யா.
காதல் என்பது ஒரே ஒரு முறை தான் மலரும் என்கிற அந்த கருமாந்திர கற்பிதத்தை இன்னுமா இந்த உலகம் நம்புகிறது?!
இதனால் சகலமானவர்களும் சொல்லிக்கொள்கிறேன்.....
பல முறை பூக்கும் பெருமரம் காதல்
மறுமணம் என்பது இயற்கையின் நியதி
அற்ப செண்டிமெண்ட் பேசி
இளம் பெண்களின் வாழ்வில் தலையிடுவது
அநாகரீகம் மட்டுமல்ல, சேடிஸம்.
உங்கள் மகளுக்கு இப்படி நேர்ந்தால்
“இப்படியே இருந்துடு” என்பீர்களா?
புரட்சிக்காரி என்ற பிம்பத்தினுள்ளேயே
அவளை சிறை வைப்பீர்களா?
எந்த கட்டமைப்பிற்குள்ளும் சிக்கிக்கொள்ளாமல்
கலக்கும்மா நீ கௌசல்யா!

- ஷாலினி (மனநல மருத்துவர், ஆலோசகர்)